புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் தேர்வுச் சுற்றில் ஜூனியர் மற்றும் சீனியர் மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் பட்டம் வென்றார் மெஹுலி கோஷ். ஷிரேயா அகர்வால், உலக நம்பர் ஒன் வீராங்கனை அபூர்வி சந்தேலா இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆட்டங்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளை நேர்முக வர்ணனை செய்வது தொடர்பாக அகில இந்திய வானொலியுடன் 2 ஆண்டுக்காலத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ. ஆகஸ்ட் 2021 வரை ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்.
தேசிய விளையாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டதாக இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம். தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டித் தலைவர் ராவ் இந்தர்ஜித் சிங்கை முறையற்ற வகையில் பதவிநீக்கம் செய்துள்ளது பாராலிம்பிக் கமிட்டி. இப்பிரச்னை தொடர்பாக பிசிஐ அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனக்கூறி அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை மதிப்பிடும் நிபுணர் (பர்ஃபாமன்ஸ் அனலிஸ்ட்ஃ ) பதவியை நிரப்ப பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.9.2019 ஆகும்.