உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவில் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்று ஆடுகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே.பிரசாத் அறிவித்தார். மே.இ.தீவுகளில் தொடக்க வீரராக இருந்து சோபிக்காத கே.எல். ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராகுலின் நீக்கம் குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:
கே.எல். ராகுலை நீக்கியது தொடர்பாக அவரிடம் பேசியுள்ளோம். மிகவும் திறமை கொண்ட கிரிக்கெட் வீரர். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய ஃபார்ம் சரியாக இல்லை.
ஷிகர் தவன், முரளி விஜய் என இருவரும் வெளியேறிய பிறகு, அணியில் இரு புதிய தொடக்க வீரர்களைக் கொண்டுவரமுடியாது. யாராவது ஒருவர் நிலைத்து நின்று ஆடவேண்டும். எனவே மூத்த வீரர்களில் ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தொடர்ச்சியாக அவரால் ரன்கள் எடுக்க முடியாமல் போனது. அவ்வப்போது நன்றாக விளையாடினார். எனவே அவரைத் தக்கவைத்துக்கொண்டோம். அவர் நன்றாக விளையாடும்போது பார்க்க அவ்வளவு நன்றாக இருக்கும். விவிஎஸ் லக்ஷ்மண் டெஸ்ட் அணியிலிருந்து ஒருமுறை நீக்கப்பட்டபோது ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 1400 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
அடுத்ததாக, ஷுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடக்கூடியவர். இவருக்குப் பின்னால் பிரியங் பஞ்சால், அபிமன்யூ ஈஸ்வரன் போன்ற வீரர்களும் உள்ளார்கள். இவர்கள் சமீபகாலமாக நன்றாக விளையாடி வருகிறார்கள். யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களுக்குத் திறமையை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் அளிக்கப்படும். தேவையான மாற்று வீரர்களும் நம்மிடம் உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.