புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்றில் 50 மீ ரைபிள் புரோன் பிரிவில் அன்ஜும் மொட்கில் தங்கம் வென்றார். 25 மீ பிஸ்டல் பிரிவில் அன்னுராஜும், ஆடவர் 50 மீ ரைபிள் புரோன் பிரிவில் தருண்யாதவும் தங்கம் வென்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி கூறியுள்ளார். டி20 அணியில் இடம் பெற்றிருந்த சைனி, டெஸ்ட் அணியில் இடம் பெர தான் கடுமையாக பாடுபட வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
டோஹாவில் வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக தடகள சாம்பியன் போட்டிக்கான இந்திய அணியில் ஓட்டப்பந்தய வீராங்கனை தூத்தி சந்த் இடம் பெற்றுள்ளார். சர்வதேச தடகள சம்மேளனத்தின் அழைப்பை ஏற்று ஏஎஃப்ஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
பார்சிலோனா அணிக்கு நெய்மர் மீண்டும் திரும்பி வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என அதன் கேப்டன் லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார். நெய்மர் வருகையால் அணி மேலும் பலம் பெறும் என்றார்.
இந்திய முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டியது எதுவுமில்லை. ஓய்வு பெறும் முடிவு என்பது அவரது உரிமை என முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.