தோனி ஓய்வு அறிவிப்பு என்பது வெறும் வதந்தி என அவரது மனைவி சாக்ஷி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, வியாழக்கிழமை ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறார் என சுட்டுரை (டுவிட்டர்), பேஸ்புக், உள்பட சமூக வலைதளங்களில் தகவல்கள் ஏராளமாக பதிவிடப்பட்டன. ஏற்கெனவே மே.இ.தீவுகள் டி20, ஒருநாள் தொடரிலும், தற்போது நடக்கவுள்ள தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை. இதனால் அவர் ஓய்வு பெறுகிறார் என தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன.
இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அபார ஆட்டம் குறித்து சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். அதில் தோனி என்னை உடல்தகுதி தேர்வு ஓட்டம் போல் ஓட வைத்தார் என பதிவிட்டிருந்தார். இதனால் சமூகவலைதளங்களில் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து பிரதானமாக பதிவுகள் போடப்பட்டன.
சாக்ஷி முற்றுப்புள்ளி: இதற்கிடையே தோனியின் மனைவி சாக்ஷி தனது சுட்டுரையில், தோனி ஓய்வு என்பது வெறும் வதந்திகள் என பதிவிட்டு இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏற்கெனவே இந்திய தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே. பிரசாத்தும் கூறுகையில், தோனி ஓய்வு குறித்து எந்த தகவலும் அவரிடம் இருந்து இல்லை என்றார். ஓய்வு முடிவு குறித்து தோனியிடம் தேர்வுக் குழு எதையும் கேட்காது என ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அணியை தேர்வு செய்வது தங்கள் உரிமை எனவும் தேர்வுக் குழு கூறியுள்ளது.