வியட்னாம் ஓபன் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் செளரவ் வர்மா தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் உள்ளூர் வீரர் டியன் மின்னை 21-13, 21-18 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினார் செளரவ்.
மியான்மரின் மண்டாலே நகரில் நடைபெறவுள்ள ஐபிஎஸ்எப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் பங்கஜ் அத்வானி நாக் அவுட் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஒருநாள் பந்துவீச்சு நிபுணர் என தொடக்கத்தில் அழைக்கப்பட்ட தனக்கு டெஸ்ட் ஆட்டங்களில் அழுத்தமான முத்திரை பதிக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கம் என ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியுள்ளார். வெறும் 12 டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே ஆடியுள்ள அவர் மொத்தம் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒஸாகா யுஎஸ் ஓபனில் பெற்ற தோல்வியை அடுத்து, தனது பயிற்சியாளர் ஜெர்மைன் ஜென்கின்ஸை நீக்கி விட்டார். புதிய பயிற்சியாளரை தான் தேடி வருவதாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஒஸாகா.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முறையான ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, இஸ்லாமாபாதில் வரும் நவம்பர் மாதம் இந்தியா-பாகிஸ்தான் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ஏஐடிஏ தெரிவித்துள்ளது.