போஸ்னியாவின் பஞ்சலுகா நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் சுமித் நாகல். சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் 7-6, 6-1 என நேர் செட்களில் ஸ்லோவேனியாவின் ஹோரன்ஸ்கியை வீழ்த்தினார். நெதர்லாந்தின் டேலன் கிரிக்ஸ்போரை இறுதி ஆட்டத்தில் எதிர்கொள்கிறார் நாகல்.
புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்று போட்டியில் ஆசிய சாம்பியன் செளரவ் செளதரி ஆடவர் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில் தானே நிகழ்த்திய உலக சாதனையை முறியடித்தார். ஏற்கெனவே அவர் இதில் 246.3 புள்ளிகளை குவித்திருந்த அவர் இதில் 246.8 புள்ளிகளை குவித்து பட்டம் வென்றார்.
டி20 தொடரில் இந்திய அணியின் நவ்தீப் சைனி, தீபக் சஹார், கலீல் அகமது ஆகியோர் கொண்ட அனுபவமில்லாத வேகப்பந்து வீச்சை தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதன் பேட்டிங் துணை பயிற்சியாளர் லான்ஸ் குளுஸ்நர் கூறியுள்ளார்.
கஜகஸ்தானின் நுர் சுல்தான் நகரில் சனிக்கிழமை தொடங்கிய உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் முதல் நாள் இந்தியாவுக்கு ஏமாற்றமாக அமைந்தது. கிரேக்கோ ரோமன் பிரிவில் களமிறங்கிய 4 வீரர்களில் ஒருவர் கூட வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஆர்எப் எம்எம்எஸ்சி எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன் போட்டியில் அஸ்வின் தத்தா பார்முலா எல்ஜிபி 1300 பிரிவில் பட்டம் வென்றார். சென்னை வீரர் ராகுல் ரங்கசாமி இரு பிரிவுகளில் 5-ஆம் இடத்தில் உள்ளார்.
மியான்மரின் மண்டாலே நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎஸ்எப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் முதல்நிலை வீரர் பங்கஜ் அத்வானி தகுதி பெற்றுள்ளார்.
துருக்கியில் நடைபெற்று வரும் எப்ஐஏ உலக கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி (ரேலி 2)-இல் இந்தியாவின் கெளரவ் கில் வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையிலும் போராடி 12-ஆவது சுற்றில் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.