இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்துள்ளது.
மைசூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 417 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷுப்மன் கில் 92, கருண் நாயர் 78, சஹா 60, ஷிவம் டுபே 68, ஜலஜ் சக்ஸேனா 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் முல்டர், பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 109.3 ஓவர்கள் வரை விளையாடி 400 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான மார்க்ரம் 161 ரன்களும் முல்டர் 130 ரன்களும் எடுத்தார்கள். இந்திய ஏ அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் நதீம் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
3-ம் நாளின் முடிவில் இந்திய ஏ அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. பஞ்சால் 9, அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
கடைசி நாளான இன்று, அபிமன்யூ ஈஸ்வரன் 32 ரன்களிலும் ஷுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பஞ்சாலும் கருண் நாயரும் பொறுப்புடன் விளையாடினார்கள். சதமடித்த பஞ்சால், 109 ரன்களில் ஆட்டமிழந்தார். கருண் நாயர் 51 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய ஏ அணி தனது 2-வது இன்னிங்ஸில், 70 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க ஏ அணி கேப்டன் மார்க்ரம் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
முதல் டெஸ்டை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய ஏ அணி, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது.