6-ஆவது முறையாக லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு பிஃபாவின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
பிஃபா சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு பேலன் டி ஆர் எனப்படும் விருது வழங்கப்படுகிறது. வீரர்கள் அடித்துள்ள கோல், ஆட்டத்திறன் அடிப்படையில் உலகம் முழுவதும் இணையதள வாக்கெடுப்பு மூலம் சிறந்த வீரர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளனர். கடந்த 2018-இல் குரோஷிய வீரர் லூகா மொட்ரிக் பிஃபா சிறந்த வீரர் விருதை வென்றார். இந்நிலையில் 2019 ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது போட்டியில் ரொனால்டோ, மெஸ்ஸி, நெதர்லாந்து வீரர் விர்ஜில் வேன் ஜிக் ஆகியோர் இருந்தனர். இவர்களை முறியடித்து 6-ஆவது முறையாக விருதை வென்றார் மெஸ்ஸி.
ஐரோப்பிய தங்கக் காலணி விருதையும் பெற்றுள்ள அவர் 58 ஆட்டங்களில் மொத்தம் 54 கோல்களை அடித்தார். பார்சிலோனா அணிக்கு பல்வேறு பட்டங்களை பெற்றுத் தந்துள்ள, மெஸ்ஸிக்கு தனது ஆர்ஜென்டீனா அணிக்கு பெரிய பட்டம் எதையும் பெற்றுத் தர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யுஇஎப்ஏ சிறந்த வீரர் விருது பெற்ற விர்ஜில் வேன் ஜிக் தான் பிஃபா விருதையும் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் மெஸ்ஸிக்கு விருது கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஃபா சிறந்த வீராங்கனை விருதை அமெரிக்க துணை கேப்டன் மேகன் ரபேனோ பெற்றுள்ளார். நிகழாண்டு உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்கா பட்டம் வெல்ல உதவினார் மேகன்.
அவர் சக கேப்டன் அலெக்ஸ் மொர்கன், இங்கிலாந்தின் லூஸி பிரான்ûஸ பின்னுக்கு தள்ளி வுருது வென்றார்.
லிவர்பூல் கிளப் பயிற்சியாளர் ஜுர்கென் காப் சிறந்த பயிற்சியாளராகவும், அமெரிக்க அணி பயிற்சியாளர் ஜில் எல்லிஸ் மகளிர் அணி பயிற்சியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.