ஓய்வு பெறும் முடிவை தோனியிடமே விட வேண்டும் என இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை 2019 போட்டிக்கு பின் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என பல்வேறு தரப்பினர் அழுத்தம் தந்து வருகின்றனர். இளம் வீரர்களுக்கு அவர் வழிவிட வேண்டும் என ஒரு தரப்பும், ஓய்வு முடிவை தோனியே எடுக்க வேண்டும் என மற்றொரு தரப்பும் கூறி வருகிறது.
இந்நிலையில் ஷிகர் தவன் சனிக்கிழமை கூறியதாவது:
தோனி நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வருகிறார். எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியாவுக்காக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தவர் அவர். ஒவ்வொரு வீரரின் திறமையை வெளிக்கொண்டு வருவதில் தோனிக்கு நிகர் எவருமில்லை.
பெரிய தலைவருக்கானஅடையாளம் அதுவாகும். அணியின் மீதான கட்டுப்பாடே அவரது பெரும் தன்மையாகும். தற்போதைய கேப்டன் கோலியும் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். ஆட்டத்தில் நெருக்கடியான சூழலில் கோலிக்கு அவர் உதவி புரிந்து வருகிறார். ரிஷப் பந்த் அபார திறமை மிக்கவர். சில நேரங்களில் ரன்களை எடுக்க முடியாமல் போய்விடும். பந்த் மீண்டு எழுவார் என நம்புகிறேன். அவரை ஆதரிக்க வேண்டும். நானும் கடினமான தருணங்களை எதிர்கொண்டேன் என்றார் தவன்.