வுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்யனா சபலென்கா பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்று வரும் டபிள்யுடிஏ போட்டியின் இறுதிச் சுற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஆர்யனா சபலென்கா அமெரிக்காவின் ஆலிஸன் ரிஸ்கேவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக கைப்பற்றினார் சபலென்கா. இரண்டாவது செட்டில் சவால் விட்டு ஆடிய ரிஸ்கே 3-6 என சபலென்காவை சாய்த்தார். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் சபலென்கா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். தொடர்ந்து 5 கேமை அவர் வென்ற நிலையில் ஒரு கேமை ரிஸ்கே கைப்பற்றினார். பின்னர் கடைசி கேமையும் கைப்பற்றிய சபலென்கா 6-1 என செட்டையும் வென்றார். இறுதியில் 6-3, 3-6, 6-1 என வென்று இரண்டாவது முறையாக சாம்பியன்பட்டத்தை கைப்பற்றினார் ஆர்யனா சபலென்கா.