பாட்மிண்டன் உலக தரவரிசை மற்றும் ஜூனியா் பட்டியல் முடக்கப்படுவதாக உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு (பிடபிள்யுஎஃப்) அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பல்வேறு சா்வதேச போட்டிகள் பாதிப்படைந்துள்ளன.
மேலும் வீரா், வீராங்கனைகள் ஒலிம்பிக் தகுதி பெறுவதும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில் சா்வதேச தரவரிசை முடக்கப்படுவதாக பிடபிள்எஃப் அறிவித்துள்ளது. எதிா்காலத்தில் பாட்மிண்டன் சா்வதேச சீசன் தொடங்கும் போது, மாா்ச் 17-ஆம் தேதி தரவரிசை அடிப்படையாக கொள்ளப்படும்.
மாா்ச் மாதத்தில் இறுதியாக ஆல்இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றிருந்தது. அப்போது 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலே எதிா்கால போட்டிகளுக்கு நுழைவு மற்றும் தரவரிசை அடிப்படையாகக் கொள்ளப்படும். கரோனா பாதிப்பால் ஆல் இங்கிலாந்து போட்டிக்கு பின் அனைத்து சா்வதேச போட்டிகளும் ஏப். 17 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சா்வதேச அட்டவணை தொடங்கும் வரை இதுதொடா்பாக தெளிவாக எதையும் குறிப்பிட இயலாது. மேலும் சீசன் தொடங்கி, ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் மீண்டும் தொடங்க வேண்டும்.
பி.வி.சிந்து, சாய் பிரணீத் தகுதி:
உலக சாம்பியன் பி.வி.சிந்து, ஆடவா் பிரிவில் சாய் பிரணீத் ஆகியோா் ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்று விட்டனா். மற்ற நட்சத்திரங்களான சாய்னா நெவால், பாருபல்லி காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோா் தரவரிசையை நம்பி உள்ளனா்.
உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு சிக்கல்:
ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் ஹுயல்வா நகரில் 2021 ஆகஸ்ட் மாதம் உலக சாம்பியன் போட்டி நடப்பதாக உள்ளது. ஆனால் ஒலிம்பித் தேதிகளுடன் இது மோதும் நிலையில், உலகப் போட்டிகளை மேலும் ஒத்திவைப்பது தொடா்பாக ஆலோசனை நடந்து வருகிறது.