அதிக பணம் அளிப்பதால் இளம் வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசைதிருப்புகிறது என முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் யுவ்ராஜ் சிங் கூறியதாவது:
ஐபிஎல் அதிக பணத்தைத் தருகிறது. இது இளம் வீரர்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறது.
தற்போதைய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறார்கள். ஆனால் இளம் வீரர்கள், அவர்கள் அதிகமாக ஒருநாள் கிரிக்கெட் தான் விளையாடுகிறார்கள், நான்கு நாள் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காண்பிப்பதில்லை.
இளம் வீரர்களுடன் பேசும்போது ஒன்று புரிகிறது, அவர்கள் மூத்த வீரர்களுக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை தரலாம். முன்பு, மூத்த வீரர்களுக்கு நாங்கள் வழங்கிய மரியாதையை தற்போதைய இளம் வீரர்கள் தங்களுடைய மூத்த வீரர்களுக்கு அளிப்பதில்லை. மூத்த வீரர்கள் எங்களுக்கு நிறைய கற்றுத் தந்தார்கள். கங்குலி எனக்கு நிறைய ஆதரவளித்தார். அதனால் ஏராளமான நினைவுகள் உள்ளன. ஆனால் அதே அளவு ஆதரவை தோனி, கோலியிடம் எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.