நாங்கள் இந்தியர்கள் என்பதால் ஹிந்தியில் தான் பேசுவோம் என ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிக்கை வைத்த ரசிகர்களின் கோரிக்கையை நிராகரித்தார் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.
கரோனா அச்சுறுத்தலாலும் ஊரடங்கு உத்தரவாலும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில் உள்ளார்கள். இதனால் பிரபல கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மாவும் பும்ராவும் நேற்று இன்ஸ்டகிராம் வழியாக ரசிகர்களிடம் உரையாடினார்கள்.
ரோஹித் சர்மாவும் பும்ராவும் ஒருவருக்கொருவர் ஹிந்தியில் பேசிக்கொண்டார்கள். அப்போது ஆங்கிலத்தில் பேசுமாறு ரசிகர்கள் இருவரிடமும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ரோஹித் சர்மாவும் பும்ராவும் ரசிகர்களின் கோரிக்கையை நிராகரித்தார்கள்.
ஆங்கிலத்தில் பேசுமாறு அவர்கள் கூறுகிறார்கள். முடியாது. நாங்கள் இந்தியர்கள். ஹிந்தியில் தான் பேசுவோம். தொலைக்காட்சிப் பேட்டிகளில் நான் ஆங்கிலத்தில் பேசுவேன். தற்போது நான் வீட்டில் இருக்கிறேன் என்றார் ரோஹித் சர்மா.
பும்ராவும் ரோஹித் சர்மாவின் கருத்தை ஏற்றுக்கொண்டார். நாம் ஆங்கிலத்தில் பேசினால் ஹிந்தியில் பேசச்சொல்கிறார்கள். ஹிந்தியில் பேசினால் ஆங்கிலத்தில் பேசச் சொல்கிறார்கள் என்றார்.