விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பிரபல வீரர்கள், இணையம் வழியாக ரசிகர்கள் மற்றும் வீரர்களுடன் செஸ் விளையாட்டில் ஈடுபட்டு கரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்டவுள்ளார்கள்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 69,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு பேட்டியில் கூறியதாவது: ஏப்ரல் 11 அன்று இந்திய செஸ் வீரர்கள், ரசிகர்களுடன் செஸ் விளையாட்டில் ஈடுபட்டு கரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்டவுள்ளோம் என்று கூறியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் மற்றும் இந்தியாவில் நிலவும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது ஜெர்மனியில் உள்ளார் ஆனந்த்.
விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பி, அதிபன், விதித் குஜ்ராத்தி, ஹரிகா போன்ற இந்திய செஸ் வீரர்கள், chess.com என்கிற இணையத்தளம் வழியாக ஏப்ரல் 11 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு வீரர்கள் மற்றும் ரசிகர்களுடன் செஸ் விளையாட்டில் ஈடுபடவுள்ளார்கள். இதன்மூலம் திரட்டப்படும் நிதி, இந்தியப் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள ரசிகர்கள், பதிவுக்கட்டணமாக ரூ. 1902 (25 டாலர்) செலுத்தவேண்டும். இதன்பிறகு முதல் ஆறு இடங்களில் உள்ள இந்திய வீரர்களில் இருவருடன் அவர்கள் விளையாடலாம். விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக விளையாட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ. 11,412 (150 டாலர்) வழங்கவேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை, chess.com என்கிற இணையத்தளத்தில் அறியலாம்.