உலகக் கோப்பையை வென்ற பிறகு சச்சின் நடனமாடினார்: ஹர்பஜன்
2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது அதுவரை பார்க்காத காட்சி ஒன்றைப் பார்த்துள்ளார் ஹர்பஜன் சிங்.
இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
அன்றுதான் சச்சின் முதல்முறையாக நடனமாடியதைப் பார்த்தேன். முதல்முறையாகத் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர் ஆடினார். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.
அன்றிரவு தூங்கும்போது எனக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தை அருகில் வைத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலையில், படுக்கையில் என் அருகில் பதக்கம் இருந்தது. அதைப் பார்க்கவே அற்புதமாக இருந்தது.
உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்பது எங்கள் கனவாக இருந்தது. அது நடந்தபோது மறக்க முடியாத அனுபவமாக மாறியது. இப்போதும் அதை நினைத்துப் பார்த்தால் எனக்கு அப்படியே சிலிர்க்கும்.
உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியபோது அனைவர் முன்பும் நான் அழுதேன். அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
2011, ஏப்ரல் 2 அன்று தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. 28 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த 2-வது உலகக் கோப்பை இது. இந்தத் தருணத்துக்காக சச்சின் டெண்டுல்கர் 22 வருடங்கள் காத்திருந்தார். அந்த வகையில் இந்த வெற்றி அனைத்து வீரர்களுக்கும் மறக்க முடியாத நினைவுகளை வழங்கியுள்ளது.