ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் டி20 உலகக் கோப்பை உரிமைகளை மாற்றிக்கொள்ளலாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
செப்டம்பர் 30 வரை வெளிநாட்டினர் உள்ளே நுழைய ஆஸ்திரேலிய அரசு தடை விதித்திருப்பதை அனைவரும் அறிவோம். டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மத்தியில் ஆரம்பிக்கிறது. எனவே தற்போதைய சூழலில் அங்கு உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுவது கடினம் என்றே தெரிகிறது.
அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடக்கிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டால், ஒருவேளை இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு குறைந்துவிட்டால், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகக் கோப்பைப் போட்டிகளை மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம் இந்த வருட அக்டோபர் - நவம்பரில் இந்தியாவில் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும். அடுத்த வருட அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறலாம். அப்படி நடைபெற்றால், டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஐபிஎல் போட்டியை நடத்தலாம். இதன்மூலம் வீரர்களுக்கும் போதுமான அளவுக்குப் பயிற்சி கிடைக்கும் என்றார்.