2021 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை நடத்த நியூ செளத் வேல்ஸ் மாநிலம் விருப்பம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மே 24- ஜூன் 7 தேதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில் 2021 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை நடத்த நியூ செளத் வேல்ஸ் மாநிலம் விருப்பம் தெரிவித்துள்ளது. நான்கு கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி, 1972 முதல் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆனால் மெல்போர்ன் அமைந்துள்ள விக்டோரியா மாநிலத்தில் தற்போது 8,000 கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நியூ செளத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது 800 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மெல்போர்னுக்குப் பதிலாக தங்களது மாநிலத்தில் 2021 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை நடத்த வேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை முதல்வர் ஜான் பரிலாரோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
மெல்போர்னுக்குப் பதிலாக அடிலெய்டில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியும் மெல்போர்னில் நடைபெறுவது தற்போது சந்தேகமாகியுள்ளது.