பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று (சனிக்கிழமை) நிறைவடைந்த நிலையில், அடுத்த 2 ஆட்டங்கள் முறையே ஆகஸ்ட் 13 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தொடங்கவிருக்கிறது.
இந்த நிலையில், குடும்ப விவகாரம் காரணமாக அடுத்த 2 ஆட்டங்களிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். இந்தத் தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த வாரம், அவர் பிரிட்டனிலிருந்து புறப்பட்டு நியூஸிலாந்து பயணிக்கவுள்ளார்.
முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலும் பென் ஸ்டோக்ஸ் முறையே 0 மற்றும் 9 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.