ஐபிஎல் 2020 விளம்பரதாரருக்கான போட்டியில் பதஞ்சலி நிறுவனமும் இணைந்துள்ளது.
இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் மாதம் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் ஐபிஎல் விளம்பரதாரராக சீன நிறுவனமான விவோ தொடரும் என பிசிசிஐ அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐயும் விவோ நிறுவனமும் தங்களுடைய கூட்டணியை ரத்து செய்வதாக அறிவித்தன.
இந்நிலையில் இந்த வருட ஐபிஎல்-லின் விளம்பரதாரருக்கான போட்டியில் அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம், டிரீம் 11 எனப் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளன. தற்போது இப்போட்டியில் பதஞ்சலி நிறுவனமும் இணைந்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே. திஜாராவாலா ஒரு பேட்டியில் கூறியதாவது:
இந்த வருட ஐபிஎல் விளம்பரதாரருக்கான போட்டியில் பதஞ்சலி நிறுவனமும் உள்ளது. இதன்மூலம் பதஞ்சலி பிராண்டை உலகளவில் பிரபலப்படுத்த முடியும். பிசிசிஐயிடம் எங்கள் கோரிக்கையை விரைவில் தெரிவிப்போம் என்றார்.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை குணப்படுத்த பதஞ்சலி நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளதாக, அந்த நிறுவனத்தை தோற்றுவித்த யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். நோய்த்தொற்றுக்கு எதிராக மருந்து தயாரிக்கும் பணியில் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் அறிவிப்பு பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. பதஞ்சலி நிறுவனத்தின் மருந்து தொடா்பான தகவல்களை விரைவில் வழங்குமாறு, அந்த நிறுவனத்திடம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது. அந்த மருந்து குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் வரை, அதனை விளம்பரப்படுத்துவதை நிறுத்தவும் என்று அந்த அமைச்சகம் உத்தரவிட்டது.
பிறகு, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக விற்பனை செய்ய பதஞ்சலி நிறுவனத்துக்கு அமைச்சகம் அனுமதி வழங்கியது. கரோனா நோய்த்தொற்றை குணப்படுத்தும் என்று விளம்படுத்தி அந்த மருந்தை விற்பனை செய்யக் கூடாது எனவும் அமைச்சகம் தெரிவித்தது.