2021, 2022 ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கேவுக்காக தோனி விளையாட வேண்டும் என சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு சமீபத்தில் அனுமதி தந்தது. இதையடுத்து ஐபிஎல் போட்டியை நடத்த ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ அனுமதி தந்துள்ளது.
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:
2020, 2021 என இரு ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கேவுக்காக தோனி விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதற்கடுத்த வருடமான 2022-லும் அவர் விளையாட வேண்டும். ஜார்கண்டில் உள் அரங்கில் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகளில் படித்தேன். அவரைப் பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவருக்குத் தன்னுடைய பொறுப்புகள் தெரியும். அவர் தன்னையும் அணியையும் நன்குப் பார்த்துக்கொள்வார் என்றார்.