சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே பயிற்சி முகாமிலிருந்து நட்சத்திர வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.
இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் சில நாள்களுக்குப் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். தோனி, ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தனி விமானம் மூலம் தோனி, ரெய்னா, அம்பட்டி ராயுடு, ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் நாளை சென்னைக்கு வருகிறார்கள். ஆகஸ்ட் 15 முதல் 20 வரை அனைவரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். பிறகு, சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று செல்லவுள்ளார்கள்.
இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே பயிற்சி முகாமிலிருந்து நட்சத்திர வீரர் ஜடேஜா விலகியுள்ளார். சொந்தக் காரணங்களுக்காக அவர் விலகியுள்ளார். எனினும் சென்னையிலிருந்து தான் அவர் துபைக்குச் செல்வார் என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.