அடுத்த வருட ஐபிஎல் போட்டி வழக்கம் போல ஏப்ரல் மாதம் தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சூழல்நிலை சரியாகும்போது இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும். ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது. டிசம்பரில் இருந்து அங்கு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும். பிறகு இந்திய அணி இந்தியாவுக்குத் திரும்பும். பிப்ரவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து தொடர்களில் விளையாடும். ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.