பார்சிலோனா: பார்சிலோனா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, தனது அணிக்காக 644-ஆவது கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார். ஒரு கால்பந்து வீரர் ஒரே கிளப்புக்காக அடித்த அதிகபட்ச கோல் இதுவாகும்.
முன்னதாக பிரேஸில் கால்பந்து நட்சத்திரம் பீலே, சான்டோஸ் எஃப்சி கால்பந்து அணிக்காக 643 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அவர் 1957 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் இந்த சாதனையை எட்டியிருந்தார்.
இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் கடந்த சனிக்கிழமை வாலென்சியா அணிக்கு எதிராக பார்சிலோனா விளையாடியபோது, ஒரு கோல் அடித்த மெஸ்ஸி அப்போது பீலேவின் சாதனையை சமன் செய்திருந்தார்.
அதாவது பார்சிலோனா அணிக்காக அவர் 643-ஆவது கோல் அடித்திருந்தார். இந்நிலையில், லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா - வல்லாடோலிட் அணிகள் இடையேயான ஆட்டம் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவில் நடைபெற்றது. அதில் பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அந்த ஆட்டத்தின்போது மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். ஏற்கெனவே பீலேவின் சாதனையை சமன் செய்திருந்த அவர், தற்போது இந்த கோல் மூலமாக பீலேவின் சாதனையை கடந்து "ஒரே கால்பந்து கிளப்புக்காக 644 கோல்கள் அடித்த ஒரே வீரர்' என்ற பெருமையை பெற்றுள்ளார். பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி 2004-ஆம் ஆண்டு முதல் 17 சீசன்களில் 749 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார்.