இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் திட்டமிட்டபடி சிட்னியில் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.
சிட்னி நகர் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமீபகாலமாக கரோனா பாதிப்பு அதிகமானது. இதனால் 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெறுவதற்குப் பதிலாக மெல்போர்னில் நடைபெற வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் 3-வது டெஸ்ட், திட்டமிட்டபடி சிட்னியில் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு கூறியுள்ளது.