காயம் காரணமாக இந்தியத் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகவுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 5-0 எனக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா. இதன் மூலம் 5-0 என முழுமையாக டி20 தொடரை வென்ற முதல் அணி என்ற சிறப்பைப் பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய நியூஸி அணி 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் இன்னிங்ஸின்போது 41 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் விளையாடி வந்த கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இந்திய அணி பந்துவீசியபோது அவர் களமிறங்கவில்லை. இதனால் கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார்.
இந்நிலையில் காயம் காரணமாக ஒருநாள், டெஸ்ட் ஆகிய இரு தொடர்களிலிருந்தும் ரோஹித் சர்மா விலகவுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள், டெஸ்ட் என இரண்டிலும் கடந்த வருடம் மிகச்சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா, சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரிலும் அருமையாக விளையாடினார். இதனால் ரோஹித் சர்மாவின் விலகல் இந்திய அணிக்குப் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் பிப்ரவரி 5 மற்றும் பிப்ரவரி 21 அன்று முறையே தொடங்கவுள்ளன.