பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தனது 7-வது இரட்டைச் சதத்தை எடுத்துள்ளார் தமிழக வீரர் அபினவ் முகுந்த்.
வதோதராவில் நடைபெற்று வரும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் பரோடா அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழகம் முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்களை எடுத்திருந்தது. முகுந்த் 73, சூர்யபிரகாஷ் 61 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
நேற்று, முதல் தர கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த 30 வயது முகுந்த், இன்று தனது 7-வது இரட்டைச் சதத்தை எடுத்துள்ளார்.
242 பந்துகளில் 206 ரன்கள் எடுத்த முகுந்த், கிருனாள் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 34 பவுண்டரிகளை அடித்தார். சூர்யபிரகாஷ் 75, தினேஷ் கார்த்திக் 49, முகமது 54 ரன்கள் எடுத்தார்கள். தமிழக அணி, முதல் இன்னிங்ஸில் 108.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த பரோடா அணி, 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 306 ரன்கள் பின்தங்கியுள்ளது.