இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 அன்று தொடங்கியது. முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதனால் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட், பிப்ரவரி 29 அன்று தொடங்கவுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
தற்போதைய நிலையில் முதல் டெஸ்டில் ஏன் தோற்றோம் என அலசவேண்டியதில்லை. ஏனெனில் எந்தத் தவறும் நடக்கவில்லை. செயல்படுத்துவதில் தான் நாங்கள் சரியாக இல்லை.
நல்ல மனநிலையில் இருக்கும்போது பிரித்வி ஷா அதிரடியாக விளையாடக்கூடியவர். தன்னால் அப்படிச் செய்யமுடியும் என அவர் எண்ணினால், பிறகு அவருடைய ஆட்டம் வேறு விதமாக இருக்கும். இந்த மனநிலை வெகு சீக்கிரம் மாறும்.
நியூஸிலாந்து சூழலைப் பழகிக்கொள்ள அவருக்கான கால அவகாசம் தரப்படும். அவருக்குத் தேவையான நம்பிக்கையை நாங்கள் தருவோம். அவர் ரன்கள் எடுக்க ஆரம்பித்தவுடன் தன் ஆட்டத்தில் நம்பிக்கையுடன் இருப்பார். அதிக ரன்கள் எடுப்பதற்கான வழியை அவர் கண்டுகொள்வார். ஏனெனில் அவர் இயல்பாகவே அதிரடியாக விளையாடக் கூடியவர். எப்போது ரன்கள் அடித்தாலும் பெரிய அளவில் ஸ்கோர் செய்வார்.
வெளிநாடுகளில் நாங்கள் நன்றாக விளையாடும்போது, தொடக்கக் கூட்டணி நன்றாக விளையாடியுள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தும் அளவுக்கு விரைவாக ரன்கள் எடுத்துள்ளார்கள். ஷாவும் அப்படி விளையாடக் கூடியவர் என்று கூறியுள்ளார்.