சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில், கிரிக்கெட் பந்தைச் சேதப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் வார்னருக்கும் ஸ்மித்துக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இதனால் 2018 ஐபிஎல் போட்டியில் வார்னர் பங்கேற்கவில்லை.
கடந்த இரு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன். 2018-ல் சன்ரைசர்ஸ் அணி, ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடித் தோற்றது. கடந்த வருடம் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2015 முதல் 2017 வரை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வார்னர் செயல்பட்டுள்ளார். 2016-ல் வார்னர் தலைமையில் அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.
இந்த அறிவிப்பின் மூலம் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் அணியில் தேர்வாகும் வாய்ப்பு குறைந்துள்ளது. ஏற்கெனவே அந்த அணியில் உள்ள வார்னர், ரஷித் கான், ஜானி பேர்ஸ்டோவ், முகமது நபி ஆகிய வீரர்களுக்கு நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிகிறது. மிட்செல் மார்ஷ், ஃபெபியன் ஆலன், பில்லி ஸ்டேன்லேக், வில்லியம்சன் ஆகிய வீரர்களும் நான்கு இடங்களுக்கான போட்டியில் உள்ளார்கள். இதனால் கடும் போட்டியுள்ள நிலைமையில் வில்லியம்சனுக்குத் தொடர் வாய்ப்புகள் அணியில் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.