19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல் என இந்தியக் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஊடகப் பிரிவு வெளியீட்டின்படி விராட் கோலி இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
"ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல். அது எங்களுக்கு ஒரு நல்ல தளத்தை அமைத்துத் தந்தது. அதிலிருந்து எங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. எனவே, அது என் மனதில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தொடர் அளிக்கும் வாய்ப்பினை நன்கு புரிந்துகொண்டு அதற்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியமானது.
நான் கேன் வில்லியம்ஸனுக்கு எதிராக விளையாடியது நினைவில் உள்ளது. அவர் எப்போதும் அவரது அணியில் தனித்து தெரிவார். அவருடைய பேட்டிங் திறன், மற்றவர்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டு இருந்தது.
கேன் வில்லியம்ஸன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தங்களுடைய சீனியர் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். அந்தப் பிரிவில் (2008-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை) இருந்து நிறைய பேர் தங்களது சீனியர் அணிக்காக விளையாடி வருவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது" என்றார்.
2008-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை இந்திய அணியில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையை இந்திய அணி முகமது கைப் (2000), விராட் கோலி (2008), உன்முக்த் சந்த் (2012) மற்றும் பிருத்வி ஷா (2018) ஆகியோரது தலைமையில் மொத்தம் 4 முறை வென்றுள்ளது.
இந்நிலையில், 2020-ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி நியூஸிலாந்து, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுடன் குரூப் 'ஏ'வில் இடம்பெற்றுள்ளது. பிரியம் கர்க் தலைமையிலான இளம் இந்தியப் படை தனது முதல் ஆட்டத்தில் வரும் 19-ஆம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது.