சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் 20 வயது இங்கிலாந்து வீரர் டாம் பாண்டனை ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பலரும் பாண்டனின் தேர்வு குறித்து ஆச்சர்யப்பட்டார்கள். இந்நிலையில் பாண்டனை அந்த அணி தேர்வு செய்தது எவ்வளவு சரியானது என இன்று நிரூபணமாகியுள்ளது.
டாம் பாண்டன், ஆஸ்திரேலியாவின் பிபிஎல் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் இடம்பெற்றுள்ளார். இன்று, பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக 8 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. நான்காவது ஓவரை ஆஸ்திரேலியாவின் 21 வயது அர்ஜுன் நாயர் வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்காத பாண்டன், அடுத்த ஐந்து பந்தைகளையும் சிக்ஸர்களாக மாற்றினார். இதனால் ஒரே ஓவரில் 30 ரன்கள் எடுத்து அசத்தினார். 16 பந்துகளில் அரை சதமெடுத்த பாண்டன், பிபிஎல் போட்டியில் 2-வது அதிவேக அரை சதமெடுத்து சாதனையைப் படைத்தார். பிரிஸ்பேன் ஹீட் அணி 8 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.
இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் டாம் பாண்டனின் அதிரடி ஆட்டத்தையும் ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.