கான்பூரில் நடைபெற்ற ரஞ்சி ஆட்டத்தில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராகத் தமிழக அணி 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் 3-ம் நாளின் இறுதியில் உத்தரப் பிரதேச அணி, 65.6 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதனால் இரு அணிகளில் எந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் என்கிற பரபரப்பு ஏற்பட்டது.
இன்று ஆட்டம் தொடர்ந்தபோது அங்கித் ராஜ்புத்தை போல்ட் செய்தார் நடராஜன். இதனால் உத்தரப் பிரதேச அணி 175 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்ஸில் தமிழக அணி 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. செளரப் குமார் 2-வது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் உத்தரப் பிரதேச அணிக்கு 34 ஓவர்களில் 160 ரன்கள் எடுக்க இலக்கு அளிக்கப்பட்டது. எனினும் கடைசி நாளின் ஆட்ட முடிவில் அந்த அணி 7.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தமிழ்நாடு - உத்தரப் பிரதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தன. உத்தரப் பிரதேச அணிக்கு 1 புள்ளி மட்டும் கிடைத்தது.