ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.
இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. ஃபிஞ்ச் - வார்னர் ஆகிய இருவரும் அபார சதமடித்து வெற்றிக்கு வித்திட்டனா். 1--0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி ட்விட்டரில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அது அமைந்துள்ளது. அவர் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு ஆட்டங்களும் பரபரப்பாக அமையும். மிகவும் வலுவான அணி நம்முடையது. ஒருநாள் மட்டும் சரியாக விளையாடவில்லை. இதற்கு முன்னால் இதுபோன்ற நிலைமையில் இருந்து, 0-2 என இருந்து தொடரை வென்றுள்ளார்கள். இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.