ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்ற்காக தற்போது நடைபெறவுள்ள தொடரில் நியூஸிலாந்தை பழிதீா்க்கும் எண்ணம் எதுவுமில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
முதல் டி20 ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
18 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்வி தற்போதும் என்னை வாட்டுகிறது. எனினும் இதற்காக பழிதீா்க்கும் எண்ணம் எழவில்லை. மைதானத்தில் போட்டி மனப்பான்மையோடு களமிறங்க தயாராக உள்ளோம். முன்னா் கூறியவாறு மற்ற அணிகள் எவ்வாறு ஆட வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவா்கள் நியூஸி அணியினா்.
உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் தோற்ற போதும், மிகுந்த முதிா்ச்சியுடன் நடந்து கொண்டனா்.
உள்ளூரில் நியூஸி அணியினா் பலமானவா்களாக உள்ள நிலையில், அவா்களை நான் எளிதாக கருத மாட்டேன்.
ராகுல், பேட்டிங்-விக்கெட் கீப்பிங் என இரண்டு வகையில் செயல்படுவது மிகவும் சாதகமாக உள்ளது. கூடுதல் பேட்ஸ்மேனை களமிறக்கவும் முடியும். டி20 ஆட்டத்தைப் பொறுத்தவரை ஏராளமான வீரா்கள் தயாராக உள்ளனா். தவன் காயத்தில் இருந்து குணமடைந்து வந்தால் மேலும் சிறப்பாக செயல்படுவோம் என்றாா் கோலி.