3டி கிரிக்கெட்டை ஜூலை 18 அன்று நடத்துகிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்!

3டி கிரிக்கெட்டை ஜூலை 18 அன்று நடத்துகிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்!

3டி என்கிற புதிய வகை கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தவுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 3டி என்கிற புதிய வகை கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தவுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்கள் உள்ளன. டி10 கிரிக்கெட் ஆட்டங்களும் லீக் அளவில் விளையாடப்படுகின்றன. அடுத்த வருடம் ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரெண்ட் என்கிற இன்னொரு வகை கிரிக்கெட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் 3டி என்கிற புதிய வகை கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தவுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

மூன்று அணிகள் கலந்துகொள்ளும் இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் விளையாடுவார்கள். 18 ஓவர்கள் இருமுறை என 36 ஓவர்கள் வீசப்படும். இதற்கு இடைவேளை உண்டு.

ஒவ்வொரு அணியும் 12 ஓவர்கள் விளையாடவேண்டும். அது இரு 6 ஓவர்களாகப் பிரிக்கப்படும். முதல் ஆறு ஓவர்களில் ஒரு அணிக்கு எதிராக விளையாடி, மீதமுள்ள 6 ஓவர்களில் மற்றொரு எதிரணியுடன் விளையாட வேண்டும். இதனால் மூன்று அணிகளும் முதல் பாதியில் 18 ஓவர்கள் விளையாடியிருக்கும்  

முதல் பாதியில் அதிக ரன்கள் எடுத்த அணி 2-வது பாதியில் முதலில் விளையாடும். 7 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்துவிட்டால் 8-வதாக உள்ள வீரர் இரட்டைப் படையில் தான் ரன்கள் எடுக்க முடியும். முதல் பாதியிலேயே 7 பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்துவிட்டால் மீதமுள்ள பேட்ஸ்மேன் 2-வது பாதியில் தனது இன்னிங்ஸைத் தொடரலாம். 

12 ஓவர்களுக்கும் சேர்த்து ஒரு புதுப் பந்து, பந்துவீச்சாளர்களுக்குத் தரப்படும். அதை இரு அணிகளுக்கு எதிராகவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

ஒரு பந்துவீச்சாளருக்கு அதிகபட்சமாக 3 ஓவர்கள் தரப்படும். 7-வது பேட்ஸ்மேனை வீழ்த்திவிட்டால் ஓவரைத் தொடர முடியாது. அந்த ஓவரில் மீதமுள்ள பந்துகளில் ரன் எடுக்கவில்லை எனக் கணக்கிடப்படும். 

அதிக ரன்கள் எடுத்தால் தங்கம், 2-வது இடத்துக்கு வெள்ளி, 3-வது இடத்துக்கு வெண்கலம்.

அதிக ரன்கள் எடுத்ததில் சமன் என்கிற நிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவரைக் கொண்டு தங்கம் வழங்கப்படும். மூன்று அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்திருந்தால் மூன்று அணிகளுக்கும் தங்கப் பதக்கம் கிடைக்கும். 2-வது இடத்துக்கு இந்த நிலை ஏற்பட்டால் வெள்ளிப் பதக்கம் பகிர்ந்தளிக்கப்படும்.

இந்த ஆட்டத்தில், விருப்பத்தின் பெயரில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பங்கேற்கலாம் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மூன்று அணிகளும் அறிவிக்கப்பட்டன. 

முதலில் இந்த ஆட்டம், ஜூன் 27 அன்று சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடைபெறுவதாக இருந்தது. கிங்பிஷர்ஸ், ஹாக்ஸ், ஈகிள்ஸ் என மூன்று அணிகள் விளையாடவுள்ளதாகவும் ஏபி டி வில்லியர்ஸ், குயிண்டன் டி காக், ரபடா ஆகிய மூவரும் இந்த அணிகளின் கேப்டன்களாக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் 3டி கிரிக்கெட் ஆட்டம், சர்வதேச மண்டேலா தினமான ஜூலை 18 அன்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு ஒற்றுமை கோப்பை வழங்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com