கரோனா பாதிப்பிலிருந்து தனது குடும்பத்தினர் மீண்டுவிட்டதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கரோனா வைரஸ் தொற்று கடந்த மாதம் உறுதியானது. பிறகு சில நாள்கள் கழித்து அப்ரிடி ஒரு விடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
கடந்த சில நாள்களாக எனது உடல்நிலை குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதால் இந்த விடியோவை வெளியிடுகிறேன். முதல் மூன்று நாள்கள் கடினமாக இருந்தன. ஆனால் எனது உடல்நிலை தற்போது தேறி வருகிறது. இதில் உள்ள பெரிய கஷ்டமே, எனது குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியாமல் போவதுதான். அவர்களை அணைத்துக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்க இடைவெளி காப்பது அவசியம். இதுகுறித்து பதற்றம் அடையவேண்டியதில்லை.
நிவாரணப் பணிகளுக்காக நிறைய பயணம் செய்கிறபோது கரோனா வைரஸின் பாதிப்புக்கு ஆளாவேன் என்பதை அறிந்திருந்தேன். நல்லவேளை, இது தாமதமாக ஏற்பட்டது. இல்லாவிட்டால் என்னால் பலருக்கு உதவ முடியாமல் போயிருக்கும். பாகிஸ்தானிலும் பாகிஸ்தானுக்கு வெளியேயும் எனக்காகப் பிரார்த்தனை செய்பவர்கள் பலர் உள்ளார்கள் என்பதை அறிந்துகொண்டேன் என்றார்.
இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து தனது மனைவி, மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் மீண்டுவிட்டதாக அப்ரிடி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
கரோனா மறுபரிசோதனையில் மனைவியும் இரு மகள்களும் மீண்டு வந்துள்ளோம். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இப்போது குடும்பத்துடன் மீண்டும் இணைய வேண்டும். குழந்தையைக் கையில் தூக்கிவைத்துக்கொள்ள முடியாமல் இருந்தேன் என்றார்.
40 வயது அப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்டுகள், 398 ஒருநாள், 99 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.