ஒத்திவைக்கப்படும் டி20 உலகக் கோப்பை: இந்த வாரம் முடிவெடுக்கும் ஐசிசி!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படவுள்ளதாக...
ஒத்திவைக்கப்படும் டி20 உலகக் கோப்பை: இந்த வாரம் முடிவெடுக்கும் ஐசிசி!


கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்கிற கேள்விக்கு விடை தேடுவதற்காக ஐசிசி கூட்டம் ஜூன் 10 அன்று நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் கரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ள நிலையில் பொறுத்திருந்து இறுதி முடிவை எடுக்க ஐசிசி திட்டமிட்டது. 

எனினும் திட்டமிட்டபடி டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியாவில் நடத்த ஏராளமான சிக்கல்கள் உள்ளதால் இதுகுறித்து முடிவெடுக்க இந்த வாரம் வெள்ளியன்று ஐசிசி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்கும் முடிவை எடுக்கவுள்ளது ஐசிசி. இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்.

அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் ஆஸ்திரேலியாவில் 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை நடத்தவும் ஐசிசி யோசித்து வருகிறது. இதையடுத்து செப்டம்பரில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள், டி20 தொடர்களுக்காகப் பயிற்சி எடுக்கும்படி ஆஸி. வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com