கடந்த 25 வருடங்களாக இந்தியத் தடகளத் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பகதூர் சிங், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
1946-ல் பிறந்தவர் பகதூர் சிங். இவருடைய பயிற்சியால் இந்திய அணி, தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம் உள்பட 12 பதக்கங்களை வென்றது. 2018-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தடகளப் பிரிவில் எட்டு தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றது.
1995 முதல் இந்தியத் தடகளத் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த பகதூர் சிங், தற்போது தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வரை பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வயதானவர்கள் பணியாற்ற சில கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வேறு வழியின்றி தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக இந்தியத் தடகளச் சம்மேளனத்தின் தலைவர் அடில் சுமாரிவாலா கூறியுள்ளார்.
70களிலும் 80களின் ஆரம்பத்திலும் குண்டு எறிதல் வீரராகப் புகழ்பெற்றார் பகதூர் சிங். 1978, 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ளார். அர்ஜூனா, பத்ம ஸ்ரீ, துரோணாச்சாரியா விருதுகளையும் வென்றுள்ளார்.