இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உள்பட விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த 117 நாள் இடைவெளிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (புதன்கிழமை) செளதாம்ப்டனில் தொடங்குகிறது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, தாமதமாக போடப்பட்ட டாஸில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்ளே ஆகியோர் களமிறங்கினர்.
2-வது ஓவரிலேயே கேப்ரியலின் பந்தில் சிப்ளே ரன் ஏதும் எடுக்காத நிலையில் போல்டானார். இதன்பிறகு, ஜோ டென்லி களமிறங்கினார்.
தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் 3-வது ஓவர் முடிவில் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தொடங்கப்பட்ட ஆட்டத்தில் 7 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன. மழை குறுக்கீட்டால் ஆட்டம் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
4.1 ஓவரில் 3 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது இங்கிலாந்து.