2020-ம் வருடத்தை ஐபிஎல் இல்லாமல் முடிக்க மாட்டோம் - கங்குலி

இப்போது இந்த நகரங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.
2020-ம் வருடத்தை ஐபிஎல் இல்லாமல் முடிக்க மாட்டோம் - கங்குலி

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும். இந்த வருட ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அடுத்ததாக நியூசிலாந்தும் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஆங்கில ஊடகத்துக்கு கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி நடக்கவேண்டும் என விருப்பப்படுகிறோம். கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் வழக்கம்போல இயங்கவேண்டும். ஆனால் டி20 உலகக் கோப்பை குறித்து ஐசிசி இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. ஐபிஎல் எங்கு நடைபெறும் என்று ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை. 35-40 நாள்கள் கிடைத்தால் கூட இந்தியாவில் நடத்திவிடவே விருப்பப்படுகிறோம்.

மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை போன்றவை ஐபிஎல் போட்டியில் பெரிய அணிகளாக உள்ளன. ஆனால் இப்போது இந்த நகரங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்துகிறோம் என்று சுலபமாகத் தற்போதைக்குச் சொல்ல முடியவில்லை. 

வெளிநாட்டில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் பிசிசிஐக்கும் அணிகளுக்கும் அதிக செலவை அளிக்கக்கூடியதாக இருக்கும். எனவே நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளோம். 2020-ம் வருடத்தை ஐபிஎல் இல்லாமல் முடிக்க விரும்பவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com