பெண் குழந்தைக்குத் தந்தையானார் ராயுடு

சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் ராயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
பெண் குழந்தைக்குத் தந்தையானார் ராயுடு

பிரபல கிரிக்கெட் வீரர் அம்பட்டி ராயுடு, பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

ராயுடு - வித்யா தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ராயுடு - வித்யா ஆகிய இருவரும் கடந்த 2009-ல் திருமணம் செய்துகொண்டார்கள்.

சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் ராயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

2018-ல் ஐபிஎல் போட்டியை சிஎஸ்கே வென்றதில் முக்கியப் பங்கு வகித்தார் ராயுடு. அந்த வருடம் 16 ஆட்டங்களில் 602 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்திய அணிக்கு மீண்டும் தேர்வானார். எனினும் 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால், அம்பட்டி ராயுடுவால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறமுடியவில்லை. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் (3 டைமன்ஷன் திறமை) ஆகிய மூன்றை அடிப்படையாக வைத்து விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்று தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் இதற்கு விளக்கமளித்தார். தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த அம்பட்டி ராயுடு, உலகக் கோப்பை போட்டியைக் காண 3டி கண்ணாடியை வாங்கவுள்ளேன் என்று வேடிக்கையாகவும், அதே நேரம் வேதனையுடன் ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத கோபத்தில் கடந்த வருட ஜூலை மாதம் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் ராயுடு. பிறகு மனம் மாறி, தன்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இதுவரை 55 சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ராயுடு, 1694 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 சதங்களும் 10 அரை சதங்களும் எடுத்துள்ளார். மேலும், ஆறு சர்வதேச டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com