ஆஷஸ் தொடராக இருந்திருந்தால் ஸ்டூவர்ட் பிராடை அணியிலிருந்து நீக்கியிருப்பீர்களா?: முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கேள்வி

மேற்கிந்தியத் தீவுகள் அணியை இங்கிலாந்து குறைவாக மதிப்பிட்டதால் தான் முதல் டெஸ்டில் தோற்க நேர்ந்தது என...
ஆஷஸ் தொடராக இருந்திருந்தால் ஸ்டூவர்ட் பிராடை அணியிலிருந்து நீக்கியிருப்பீர்களா?: முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கேள்வி

மேற்கிந்தியத் தீவுகள் அணியை இங்கிலாந்து குறைவாக மதிப்பிட்டதால் தான் முதல் டெஸ்டில் தோற்க நேர்ந்தது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

செளதாம்ப்டனில் இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த புதன் அன்று தொடங்கியது. மழை காரணமாக முதல் நாளன்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி, ஹோல்டரின் அசத்தலான பந்துவீச்சால் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹோல்டர் 6 விக்கெட்டுகளும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பிறகு ஆடிய மே.இ. அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்ததன் மூலம் 114 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் ஓரளவு சிறப்பாக விளையாடி 313 ரன்கள் எடுத்தது. கிராவ்லி 76 ரன்கள் எடுத்தார். சிப்லி அரை சதம் எடுத்தார். கேப்ரியல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் டெஸ்டில் வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 64.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து முதல் டெஸ்டில் வெற்றியடைந்தது. பிளாக்வுட் 95 ரன்கள் எடுத்தார். கேப்ரியல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் ஜூலை 16 அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தின் தோல்வி குறித்து அதன் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியதாவது:

அற்புதமாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வாழ்த்துகள். இங்கிலாந்து அணியிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் - இது மட்டும் ஆஷஸ் தொடராக இருந்திருந்தால் ஸ்டூவர்ட் பிராடை அணியிலிருந்து நீக்கியிருப்பீர்களா? 

மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக இதுபோன்ற தவறுகளைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். அந்த அணியைக் குறைவாக மதிப்பிட்டுள்ளார்கள். இத்தனைக்கும் விஸ்டன் கோப்பையை மே.இ. தீவுகள் அணி தான் வைத்துள்ளது. 

பிராட் விளையாடியிருந்தால் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கும். அன்றைய தினம் மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் குறைவான ரன்கள் எடுத்திருக்கும். அதேபோல நல்ல வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் வென்றிருக்கும். இப்போது 0-1 என பின்தங்கியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com