கடந்த வருடம் ரஞ்சி கோப்பையை வென்ற அணி - செளராஷ்டிரம். அந்த அணியின் நட்சத்திர வீரர், ஷெல்டன் ஜாக்சன்.
33 வயது ஜாக்சன், கடந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 10 ஆட்டங்களில் 3 சதங்களுடன் 809 ரன்கள் எடுத்து அசத்தினார். செளராஷ்டிர அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் இவர் தான்.
இப்படிப்பட்ட மிகச்சிறந்த வீரரை புதுச்சேரிக்கு விட்டுக்கொடுத்துள்ளது செளராஷ்டிரம். இந்த வருட ரஞ்சி சீஸனில் புதுச்சேரி அணிக்கு அவர் விளையாடவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை முன்னாள் வீரர் சல்வி, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகக் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஷெல்டன் ஜாக்சனை முக்கிய பேட்ஸ்மேனாகத் தேர்வு செய்துள்ளது புதுச்சேரி கிரிக்கெட் சங்கம்.
இதுவரை 76 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜாக்சன், 19 சதங்களுடன் 5634 ரன்கள் எடுத்துள்ளார்.