இந்த வருட செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களில் இங்கிலாந்து அணி விளையாடவிருந்த நிலையில் இந்தச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
செப்டம்பரில் இந்தியாவில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி விளையாட இருந்தது. ஆனால் டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படும் வாய்ப்புள்ளதால் செப்டம்பர் இறுதியில் ஐபிஎல் போட்டியைத் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் இந்த வருடம் நிகழ வாய்ப்பில்லை என அறியப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ, இசிபி ஆகிய இரு அமைப்புகளும் விவாதித்து வருகின்றன. அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியாவுக்கு வருகை தந்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. அந்தச் சமயத்தில் ஒருநாள், டி20 தொடர்களை வைத்துக்கொள்ளலாம் என்று தற்போதைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல்களை இங்கிலாந்து ஊடகமான டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.