கேரள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயமோகன் தம்பியைக் கொலை செய்த குற்றத்துக்காக அவருடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தின் அருகே உள்ள மனகாட் பகுதியைச் சேர்ந்த 66 வயது ஜெயமோகன் தம்பி, கடந்த திங்கள் அன்று அவருடைய வீட்டில் சடலமாகக் கிடந்தார். உடற்கூராய்வு முடிவின்படி ஜெயமோகன் தம்பி கொலை செய்யப்பட்டதைக் காவல்துறையினர் உறுதிபடுத்தினார்கள்.
கேரள ரஞ்சி அணிக்காக 1979 முதல் 1982 வரை ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ஜெயமோகன் தம்பி. அவ்வப்போது விக்கெட் கீப்பிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூராய்வு முடிவு வந்த பிறகு ஜெயமோகன் தம்பியின் மகன் அஸ்வினை (33) விசாரணை செய்ததில் தந்தையைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மது அருந்தியிருந்த நிலையில் தந்தை, மகன் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயமோகன் தம்பியை அஸ்வின் கீழே தள்ளியதில் தலையில் அடிபட்டு அவர் இறந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அஸ்வினைக் கேரளக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். கொலை தொடர்பாக விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளார்கள்.