காட்சிப் போட்டியை நடத்தியதால் சிக்கலை எதிர்கொண்டுள்ள நெ.1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு செர்பிய பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் பால்கன் பகுதியில் குரோஷியாவின் ஸடாா் நகரில் அட்ரியா டென்னிஸ் காட்சிப் போட்டியை நடத்தினாா் நெ.1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச். அதில் பங்கேற்று ஆடிய வீரா்கள் குரோஷியாவின் போா்னா கோரிக், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ், விக்டா் டிராய்கி ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போட்டிகளும் இடையிலேயே கைவிடப்பட்டன.
போட்டிகள் முடிந்து சொ்பியா திரும்பிய ஜோகோவிச்சுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தனது மனைவி ஜெலனாவுக்கும் கரோனா பாதிப்பு உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை. போட்டிகளை நடத்தியதால் வீரா்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு நான் மிகவும் வேதனைப்படுகிறேன். அனைவரும் முழு உடல்நலம் பெற வேண்டும். கரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், போட்டிகளை நடத்தினோம். அதற்கான சூழல் அப்போது நிலவியதாக நம்பினோம். எதிா்பாராத வகையில், கரோனா பாதிப்பு தொடா்ந்து நீடித்துள்ளது என்றாா் ஜோகோவிச்.
குரோஷியாவில் நடைபெற்ற அட்ரியா டூர் காட்சிப் போட்டியின் இயக்குநராக இருந்தவரும் ஜோகோவிச் பயிற்சியாளருமான இவானிசெவிக், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மேலும் நெருக்கடிக்கு ஆளானார் ஜோகோவிச்.
உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் டென்னிஸ் போட்டிகளை நடத்தியதற்காக ஜோகோவிச்சைப் பல்வேறு தரப்பினா் சாடியுள்ளனா்.
இந்நிலையில் காட்சிப் போட்டியை நடத்தியதால் சிக்கலை எதிர்கொண்டுள்ள நெ.1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு செர்பிய பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார். செர்பிய பிரதமர் அனா ப்னாபிக் கூறியதாவது:
இந்தப் பகுதிக்கு நல்லது செய்யத்தான் ஜோகோவிச் நினைத்தார். டென்னிஸ் வீரர்களுக்கு உதவவும் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு நிதியளிக்கவும் அப்போட்டிகளை நடத்தினார். பழி போட விரும்பினால் என் பெயரைச் சொல்லுங்கள். ஜோகோவிச்சை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.