ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று (திங்கள்கிழமை) தொடங்கினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கானப் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று சென்னை வந்தார். இவர் சென்னை வந்து இறங்கிய விடியோ ஏற்கெனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தோனி தற்போது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். அவர் களத்துக்கு வந்து இறங்கும் விடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய அதிகாரபூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ரசிகர்கள் 'தோனி.. தோனி..' என கோஷம் எழுப்ப அவர் மட்டைகளுடன் களத்துக்கு வருகிறார்.
இதைத் தொடர்ந்து இந்த விடியோவும் வைரலாகத் தொடங்கியுள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவர், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளர் சாஸ்திரி கூறியுள்ளார். எனவே, தோனி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.