கொல்கத்தாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதிச்சுற்றில் பலம் வாய்ந்த கர்நாடகத்தை பெங்கால் அணி வென்று இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளது.
முதலில் விளையாடிய பெங்கால் அணி, 312 ரன்கள் எடுத்தது. பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய கர்நாடகம், அதிர்ச்சியளிக்கும் விதத்தில் 122 ரன்களுக்குச் சுருண்டது. எனினும் 2-வது இன்னிங்ஸில் சிறப்பாகப் பந்துவீசி பெங்கால் அணியை 161 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கர்நாடக அணிக்கு 352 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
3-ம் நாள் முடிவில் கர்நாடக அணி, 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் அந்த அணி 177 ரன்களுக்கு இன்று ஆட்டமிழந்தது. கே.எல். ராகுல், கருண் நாயர், மணிஷ் பாண்டே போன்ற இந்திய அணிக்காக விளையாடும் பிரபல வீரர்கள் இருந்தும் இரு இன்னிங்ஸிலும் கர்நாடக அணியால் 180 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் போனது. காரணம், பெங்கால் பந்துவீச்சாளர்கள். முதல் இன்னிங்ஸில் இஷான் போரெல் 5 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்ஸில் முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெங்கால் அணி எளிதாக வெல்ல உதவியுள்ளார்கள்.
ரஞ்சி இறுதி ஆட்டம் மார்ச் 9 அன்று நடைபெறவுள்ளது. இதில் செளராஷ்டிரம் அல்லது குஜராத் ஆகிய இரு அணிகளில் ஒன்றுடன் பெங்கால் அணி மோதும்.