ஐபிஎல்: மைதானத்தில் கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பிசிசிஐ பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்...
ஐபிஎல்: மைதானத்தில் கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பிசிசிஐ பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அலெக்ஸ் பென்சிகர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் வைரஸ் இந்தியாவிலும் பரவி, பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 42 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 3 ஆயிரத்து 497 பேர் பலியாகி உள்ளனர். மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி வரும் இந்த வைரஸ் மனித இனத்துக்குப் பெரும் சவாலாக உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் மனித இனத்துக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

இந்த வைரஸ் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எளிதாகப் பரவுகிறது. இதனால் பொது நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1893-ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் நடத்தப்பட்டு வரும் ஐ.எஃப்.எல் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளைக் காண பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதியளிக்கவில்லை. அதே போன்று வரும் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளும் தள்ளிவைக்கப்ட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த போட்டிகளை சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் பார்வையிட உள்ளனர். இந்தப் போட்டிகளைக் காண வரும் யாருக்காவது கரோனா பாதிப்பு இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதாக பரவ வாய்ப்புள்ளது. எனவே வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி வரும் மே 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில், இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தற்போது தொடங்கி உள்ளது. மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தள்ளிவைப்பதா அல்லது போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதித்து மைதானத்துக்குள் அனுப்புவதா என்பது குறித்து விரைவில் பதில்மனு தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com