கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 27,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 900 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியே எங்கும் செல்லமுடியாத நிலையில், மிகச்சிறந்த 50 ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. நாளை முதல் இரவு 8 மணி முதல் 8.30 வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சியில் 50 சிறந்த ஐபிஎல் ஆட்டங்களின் ஹைலைட்ஸ் ஒளிபரப்பாகவுள்ளன. மும்பை, பெங்களூர் அணிகளுக்கு எதிரான சிஎஸ்கே அணியின் ஆட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.