கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நிவாரண நிதி வழங்கியுள்ளார் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 33,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மற்றும் மஹாராஷ்டிர முதல்வர் பொது நிவாரண நிதிக்குக் குறிப்பிட்ட தொகையைத் தானும் அனுஷ்கா சர்மாவும் வழங்கியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். மக்கள் படும் துயரங்களைக் கண்டு மனம் உடைந்துள்ளோம். நாங்கள் அளிக்கும் நிவாரண நிதி அவர்களுடைய வலியை ஓரளவு போக்கும் என நம்புகிறோம் என்று கோலி கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் நிவாரண நிதியாக வழங்கும் தொகை குறித்து சமூகவலைத்தளங்களில் விமரிசிக்கப்படுவதால் தான் வழங்கிய தொகை எத்தனை என்று விராட் கோலி குறிப்பிடவில்லை.